செவ்வாய், 20 ஏப்ரல், 2010

பொன்சேகா சபை அமர்வுகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்படும் : இராணுவத் தளபதி _

இராணுவ நீதிமன்றத்தில் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வரும் ஜெனரல் சரத் பொன்சேகா, நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்படும் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

பொன்சேகா நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பது தொடர்பில் நாடாளுமன்ற நிர்வாகம் விடுக்கும் கோரிக்கைகளின் அடிப்படையில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவை நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்கச் செய்த பின்னர், மீண்டும் தடுப்புக் காவலில் வைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக ஏழு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகவும், அந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் இரண்டு இராணுவ நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், விசாரணைகள் நடைபெறும் சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு அவருக்குத் தடையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவை நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு வழி சமைக்குமாறு ஜனநாயக தேசியக் கூட்டணி, நாடாளுமன்றப் பதில் செயலாளர் நாயகத்திற்கு அண்மையில் கடிதம் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்

கருத்துகள் இல்லை: