சனி, 13 நவம்பர், 2010

சாதனைப் பெண் பாத்திமா


நேர் காணல் :
ஸ்டார் ராkக்
பெண்கள் தம் வாழ்க்கையில் அனுபவித்த கஷ்டங்களையும் துன்பங்களையும் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தால் ஒரு போதும் முன்னேற முடியாது. வருவது வரட்டும் என்று தைரியத்தை துணைக்கழைத்து சவால்களைச் சமாளித்து வாழ்க்கையில் முன்னேற வழி காண வேண்டும். நானும் வாழ்க்கையிலே சொல்லொணாக் கஷ்டங்களுக்கு முகம் கொடுத்தவள் தான். எனது தனிப்பட்ட வாழ்க்கையில் நான் படாத கஷ்டங்கள் இல்லை. நான் ஏங்கி அழாத நாட்களும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நான் பட்ட கஷ்டங்களும் துன்பங்களுமே என்னைப் புடம் போட்டன. கண்ணீரில் நீராடி பட்டினியில் படுத்துறங்கி பழக்கப்பட்ட எனக்கு ஆண்டவன் காட்டிய வழியே இது.

இவ்வாறு தெரிவித்தார் இவ்வாண்டின் இளம் உற்பத்தியாளருக்கான சர்வதேச விருது பெற்ற முஸ்லிம் பெண் வர்த்தகரான தென்னிலங்கையின் அம்பாந்தோட்டையைச் சேர்ந்த பாத்திமா நிஸ்ரீன் றம்ஸி.

அவர் தனது கதையை இவ்வாறு தொடங்கினார், மாத்தறை மாவட்ட வலஸ்முல்ல பிரதேசத்திலுள்ள மீயெல்ல கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட நான் மூன்று வயதாக இருக்கும் போதே தந்தையை இழந்து தாயின் பராமரிப்பிலேயே வளர்ந்தேன். மாத்தறை மீயெல்ல அல்-மினா வித்தியாலயத்தில் தரம் 9 வரை கல்வி கற்றேன்.

சிறு வயது முதலே கல்வியில் சிறந்து விளங்கினேன். வகுப்பில் எப்போதும் முதல் மாணவி.

எனது தாயாரும் சகோதரரும் கூட ஆசிரியர்களே. அவர்களின் இடமாற்றங்களுக்கேற்ப நாமும் இடம் மாறி வாழ நிர்ப்பந்திக்கப்பட்டோம். இறுதியாக அம்பாந்தோட்டை ஸாஹிறா தேசிய பாடசாலையில் சேர்ந்து 10ம் வகுப்பில் கல்வி பயின்றேன். எனினும் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. அது எனது துரதிர்ஷ்டம் தான் என்று நான் என்னையே நொந்து கொண்டேன்.

அப்போதுதான் எனக்குத் திருமணம் நிறைவேறியது. அறியாத வயது அது. வாழ்க்கையை சமாளிப்பது சற்றுக் கடினமாகத் தான் இருந்தது. எல்லாவற்றுக்கும் ஈடு கொடுத்து சவால்களை சமாளித்து வாழ்ந்தோம். எனது கணவர் தான் பெற்றிருந்த பயிற்சிக்கேற்ப சிறு அளவிலான ஒரு வெல்டிங் கடையை நடத்தி வந்தார். அதில் கிடைத்த வருமானம் எங்கள் வாழ்க்கையைக் கொண்டு நடத்தக் கூட போதுமானதாக இருக்கவில்லை.

காலம் ஒடிக்கொண்டிருந்தது. ஐந்து பிள்ளைகள் பிறந்தன. குறைந்த வருமானத்தில் மிகவும் கஷ்டத்தோடு வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி வாழ்ந்து வந்தோம். இருந்ததைப் பிள்ளைகளுக்கு ஊட்டிவிட்டுப் பட்டினியில் படுத்துறங்கிய நாட்களும் உண்டு.

இப்படி இருக்கையில்தான் ஆழிப் பேரலை எங்களைத் தேடி வந்தது. கடற்கரையை அண்டி அமைந்திருந்த கணவரின் வேலைத்தள உபகரணங்களையும் உடன் சுருட்டிக் கொண்டு அந்த சுனாமி நல்ல வேளையாக எங்களை உயிரோடு விட்டுச் சென்றது. எனினும் எங்கள் நிலை முன்னரை விடவும் மோசமாகியது. எப்படியோ எதிர்நீச்சல் போட்டோம்.

கஷ்ட நிலைமையில் வாழ்ந்த நீங்கள் இன்று உயர்ந்து நிற்கிaர்களே உங்களது வெற்றிக்கு காரணமாக அமைந்தது என்ன? என்று கேட்டேன்.

ஒவ்வொரு நாளும் நான் எனது பிள்ளைகள் பாடசாலைக்குச் சென்ற பின்னர் தொலைக்காட்சி பார்க்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தேன். ஒரு போதும் நான் ஆடல் பாடல் காட்சிகளையோ படங்கள் நாடகங்களையோ பார்ப்பதில்லை. வாழ்க்கை முன்னேற்றத்துக்கு அவசியமான குறிப்பாக பெண்களுக்குப் பயனுள்ள நிகழ்ச்சிகளையே பர்ப்பதுண்டு.இந்த அடிப்படையில் ரூபவாஹினியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுள் என்னைக் கவர்ந்த ஒரு நிகழ்ச்சி தான் ‘நுகசெவன’ எனும் மாதர் நிகழ்ச்சி. இந் நிகழ்ச்சியை நாள் தவறாமல் பார்ப்பேன். பெண்களின் சுயமுன்னேற்றத்துக்கான தகவல்களும் அது தொடர்பான செய்முறைப் பயிற்சிகள் என்பனவும் சிறந்த முறையில் இந்த நிகழ்ச்சியில் இடம்பெறுகின்றன. இதில் ஒளிபரப்பாகும் ஆடை தைத்தல், மற்றும் தோல் பைகள் தைத்தல் உட்பட மற்றும் பல பயிற்சிகளையும் ஆலோசனைகளையும் நன்கு அவதானித்து வீட்டில் தனியாக செய்து பார்த்து பழகினேன். சில நாட்களிலேயே என்னாலும் அவற்றை எல்லாம் திறம்படச் செய்ய முடிந்தது.

கணவரின் வருமானம் போதா நிலையிலும் நானும் வெறுமனே பொழுது போக்கி கொண்டிருப்பதைவிட தொலைக்காட்சி மூலம் பெற்றுள்ள பயிற்சியின் மூலம் பயன் அடைந்தால் என்ன என்று சிந்தித்தேன். கணவரும் சம்மதித்தார். 50,000 ரூபா சுயதொழில் கடன் பெற்று ஒன்றரை வருடங்களுக்கு முன் ஒரு சிறிய அறையில் கணவரின் பெயரை முதன்மையாகக் கொண்டு ‘றம்ஸி பெஸன்’ என்ற பெயரில் ஒரு சிறு கடையை ஆரம்பித்தேன். அங்கு நானே ஆடைகளையும் தோல் பைகளையும் தைத்து விற்பனையில் ஈடுபட்டேன். பின்னர் தையல் துறையில் நன்கு அனுபவம் வாய்ந்த ஒரு பெண்ணை வேலைக்கு அமர்த்திக் கொண்டேன். எனது கணவரும் பிள்ளைகளும் எனது முயற்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்கள். இவ்வாறாக நாளும் பொழுதும் அதன் வளர்ச்சி ஓங்கியது.

எனது தொழில் துறையில் சர்வதேச ரீதியிலான போட்டி ஒன்று இருப்பதாகவும் அதற்கு விண்ணப்பிக்குமாறும் வணிகர் கழகம் எனக்கு அறிவுரை வழங்கியது. நானும் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தேன். நாடளாவிய ரீதியில் விண்ணப்பித்தவர்களுள் தகைமைத் தேர்வுக்காக நான் உட்பட 12 பேர் தெரிவுசெய்யப்பட்டிருந்தோம். பின்னர் இது தொடர்பான இறுதிப் போட்டியில் பங்கு பற்ற மெக்ஸிகோ செல்ல நான் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. இதை அறிந்து மகிழ்ச்சி அடைந்த நான் முதலில் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினேன். சில நாட்களில் அழைப்பும் கிடைத்தது.... அதன் பிரகாரம் நானும் என் கணவரும் மெக்ஸிகோ சென்றோம். செப்டம்பர் மாதம் 23ம் திகதி இரவு இறுதிப் போட்டி நடந்தேறியது. இவ் வைபவத்திலே பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் பிரதம அதிதியாக செய்மதியின் ஊடாகக் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இப்போட்டியில் மொத்தமாக 38 நாடுகள் கலந்து கொண்டன. வல்லரசுகளிலிருந்தும், அபிவிருத்தி அடைந்த நாடுகளிலிருந்தும் வந்த பலரும், சர்வதேச ரீதியில் பல கிளை நிறுவனங்களைக் கொண்ட பாரிய வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள் சிலரும் கூட இதில் கலந்து கொண்டனர். நானோ ஒரு சிறிய அறையில் துணைக்கு ஒரே ஒரு பெண்ணை மட்டுமே வைத்துக் கொண்டு அன்றாட சோற்றுக்காக தைத்துப் பிழைப்பவள். அவர்களைக் கண்டு ஒரு வித அச்ச உணர்வு தோன்றினாலும் இலங்கை போன்ற ஒரு சிறிய நாட்டிலிருந்து என்னைப் போன்றதொரு சிறிய பெண்ணுக்கும் இதில் கலந்துகொள்ள வாய்ப்பு கிட்டியதை எண்ணிப் பெருமையும் மகிழ்ச்சியும் அடைந்தேன்.

போட்டியின் முதல் சுற்று முடிவடைந்து விட்டது. இறுதிச் சுற்றுத் தேர்வுக்கு நான்கு நாடுகள் மட்டுமே தெரிவாகின. உலகின் பிரபல கைத்தொழில் நாடுகளான இந்தியா, கனடா, ஹொங்கொங் ஆகியன இதில் இடம் பெற்றிருந்தன. அடுத்த நாடு ஸ்ரீலங்கா என்றதும் எனக்கு மகிழ்ச்சி தாழவில்லை. ஆண்டவனிடம் பிரார்த்தித்தேன் ஆறுதல் பரிசொன்றாவது கிடைக்க வேண்டும் என்று.

இறுதிச் சுற்றுத் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. எல்லாப் பொறுப்பையும் இறைவனிடமே சாட்டி விட்டு அமைதியாக இருந்தேன். தெரிவு முடிந்து விட்டது. பெறுபேறு பிரதம அதிதிக்குப் பறந்தும் விட்டது. முடிவு வெளியிடப்பட வேண்டியது மட்டும் தான் பாக்கி. செய்மதியூடாகக் காட்சி தரும் பிரதம அதிதி இளவரசர் சார்ள்ஸ் பெறுபேற்று அறிக்கையைக் கைகளில் தாங்கி வாசிக்கிறார். போட்டியின் வெற்றியாளராக ஸ்ரீ லங்கா என்று ஆரம்பித்து எனது பெயரை அவர் உச்சரித்தார்.

ஆச்சரியம் தாளவில்லை. கண்கள் பனிக்கின்றன. கடந்த காலம் ஒரு கணம் என் முன்னே தோன்றுகிறது. கூட இருந்தவர்களும் கூடி இருந்தவர்களும் என்னைக் கரகோஷம் செய்து கைலாகு தந்து பாராட்டுகிறார்கள்.

இதற்கு மத்தியில் நான் பேசுமாறு அழைக்கப்பட்டேன். எனது உரையின் போது நான் நடந்து வந்த கரடு முரடான பாதையைப் பற்றி அவர்களுக்கு விபரித்தேன். பட்ட கஷ்டங்களையும் துன்பங்களையும் அவர்களிடம் எடுத்துக் கூறினேன். எனது வெற்றிக்குக் காரணம் எனது விடாமுயற்சியும், நேர்மையும், துணிவும், பக்தியுமே என்பதையும் எடுத்துச் சொன்னேன். இறுதியாக இளவரசர் சார்ள்ஸ¤க்கும் எனது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்ததோடு அன்னாரை நேரடியாக சந்தித்து நன்றி கூறும் வாய்ப்புக் கிடைத்தால் அதனைப்பெரும் பேறாக மதிப்பேன் எனவும் கூறினேன். உடனடியாக இதற்கு செய்மதி மூலம் பதிலளித்த அவர் நவம்பர் மாதத்தில் இராப்போசன விருந்தொன்றினை வழங்கி என்னைக் கெளரவிக்க தீர்மானித்துள்ளதாகவும் அதல் கலந்து கொள்ள இங்கிலாந்துக்கு வருகை தருமாறும் எனக்கு அழைப்பு விடுத்தார். அதன் பிரகாரம் நவம்பர் மாதம் 15ம் திகதி நானும் துணைவரும் அங்கு செல்ல உள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.

உங்களது எதிர்காலத் திட்டம் என்ன என வினவினேன். நான் தற்போது ஈடுபட்டுள்ள துறையை மேலும் முன்னேற்றி சிறந்ததொரு நிலைமைக்கு வர வேண்டும். ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் பயனும் பெருமையும் ஏற்பட வழி செய்ய வேண்டும். எனது வாழ்க்கையையும் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் சிந்தித்து செயல்பட வேண்டும். முடிந்த வரை உதவி செய்து குடும்பத்தினரையும் சுற்றத்தாரையும் கவனிக்க வேண்டும். என்னைப் போல் பிறரும் கஷ்டங்களை அனுபவிக்கக் கூடாது. எனவே, ஏழை எளியோருக்கு உதவி புரிந்து வாழ வேண்டும் என்பதே எனது ஆசை என்றார். இதற்காக அரசாங்கம் எனக்கு உதவி புரிய வேண்டும் என்று கூறியதோடு ஒரு ஆதங்கத்தையும் இவ்வாறு வெளியிட்டார்.

இந்த சின்னஞ்சிறு தீவிலிருந்து சென்று முன்னணி கைத்தொழில் நாடுகளோடு போட்டியிட்டு வெற்றியீட்டி விருது பெற்று நாட்டுக்குப் பெருமை தேடித் தந்துள்ள என்னை அரசாங்கம் இன்று வரை கண்டு கொள்ளாதிருப்பது கவலையாக இருக்கிறது. இதனை நான் எப்படி அரசுக்குத் தெரிவிப்பது என்பது பற்றியும் எதுவும் எனக்கும் தெரியாது. இந்த வழியில் எனக்கு உதவ யாராவது முன்வரும் பட்சத்தில் நான் நன்றியுடையவளாக இருப்பேன். நான் வாழும் வீட்டில் இன்னும் ஜன்னல் கதவுகள் கூட இல்லை. இந்த நிலைமையில் வாழ்ந்து கொண்டும் தான் விடா முயற்சியால் முன்னேறி வர்த்தக ரீதியில் என் நாட்டின் புகழை உலக அரங்கில் உயர்த்தி வைத்துள்ளேன். என் பணிகளை மேலும் வளர்க்க அரசு உதவ வேண்டும் என்றார்.

இன்றைய பெண்கள் சமுதாயத்துக்கு நீங்கள் சொல்ல விரும்பும் அறிவுரை என்ன? என்று கேட்டேன்

வாழ்க்கையில் எதிர்ப்படும் கஷ்டங்களை எண்ணி சதா கவலைப்பட்டுக் கொண்டேயிருந்தால் ஒரு நாளும் வாழ்க்கை ஒளி பெற மாட்டாது. எதற்கும் முயற்சி வேண்டும். நாடு நாடாகச் சென்று சிரமத்தை விற்று அல்லல்பட்டு சம்பாதிப்பதை விடுத்து தனது வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளும் உயரிய நோக்கோடு ஒவ்வொரு பெண்ணும் சொந்த மண்ணில் தத்தமது கலாசார வழி முறைகளுக்கு உட்பட்டு நீதியான, நியாயமான, நேர்மையான வழி முறைகளில் பொருள் தேடும் முயற்சிகளில் ஈடுபடுவதில் எந்தத் தவறும் இல்லை. எனவே பெண்கள் சமூகம் குறிப்பாக முஸ்லிம் சகோதரிகள் உரிய வரையறைக்கு உட்பட்டு தொழில் முயற்சிகளில் ஈடுபட்டால் குடும்ப சுமையும் தளர்ந்து கஷ்டங்களும் களைந்து மகிழ்ச்சியாக வாழ வழி கிட்டும் என்றார்.

கருத்துகள் இல்லை: